பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது நிலையில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட், முதல் நிலையில் உள்ள 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதுநீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
