கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பஜாரில் காய்கறி கடை, மளிகை கடை, அடகு கடை, மின்வாரியம் அலுவலகம், டீ கடை, இனிப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு பூவலம்பேடு, தாணிப்பூண்டி, பெரிய புலியூர், கொள்ளாணுர், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் தேவைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஜாரில் மாங்கினால் என்பவருக்குச் சொந்தமான அடகு கடை உள்ளது. இதையொட்டி ரம்யா பேன்சி ஸ்டோர் மற்றும் சில கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை பூவலம்பேடு பஜாருக்குள் புகுந்த மர்ம நபர்கள், அடகுகடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 ஆயிரம் என தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பூவலம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.