×

ஆவடி அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக, ரவுடியை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரி யாக வெட்டிக் கொலை செய்தது. ஆவடி அடுத்த பொத்தூர், வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பெயின்டர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன் யோகேஸ்வரன் ரவுடியாக இருந்துள்ளார். இவர்மீது ஆவடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு   மர்ம கும்பல் சுற்றி வளைத்து, மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டியுள்ளனர்.

இதை தடுக்க வந்த அவரது மனைவியையும், அந்த மர்ம கும்பல் கீழே பிடித்து தள்ளியது. இதில், படுகாயம் அடைந்த ரவுடி யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவலறிந்த  ஆவடி காவல் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர்,  யோகேஸ்வரனின் சடலத்தை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், ரவுடி யோகேஸ்வரனுக்கும் மீன் வியாபாரி சுறாவுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து மீன் வியாபாரி சுறாவை அவரது வீட்டில் தனது நண்பருடன் சேர்ந்து ரவுடி யோகேஸ்வரன் கடந்த 2016ம் ஆண்டு வெட்டி கொலை செய்துள்ளார். ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, இணை ஆணையர் கருப்பன், துணை ஆணையர் பாஸ்கர், உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று காலை குற்றவாளிகள் 6 பேர் உயர் நீதிமன்றத்தில் சரணடைய சென்று கொண்டிருந்த போது  அம்பத்தூர் அடுத்து பாடி ரவுண்டானாவில் அவர்களை போலீசார்  மடக்கி பிடித்தனர். மீன் வியாபாரி சுறாவின் கொலைக்கு காரணமான ரவுடி யோகேஸ்வரனை பழிக்குப்பழி  வாங்கும் நோக்கில் அவரது மகன் பொத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (17) உள்பட அவர்களது கூட்டாளி பொத்தூர் பகுதியை சேர்ந்த அப்பு என்கின்ற சந்துரு (19), திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணிமாறன் (30), கொளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (20), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் (21), தாம்பரம் பகுதியை சேர்ந்த முத்து (18) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Avadi , 6 people arrested in case of murder of famous rowdy near Avadi
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்