சென்னை: சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள், 2க்கும் மேற்பட்ட அடிதடி, தகராறு வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் வழக்குகள், மற்றும் 2க்கும் மேற்பட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் ஆகிய குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 805 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, அறிவுரை வழங்கப்பட்டது. 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 10 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையாளர் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள், 2க்கும் மேற்பட்ட அடிதடி. தகராறு வழக்குகள், பணம் கேட்டு மிரட்டும் மற்றும் 2க்கும் மேற்பட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (5.03.2023) ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர்.
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனை: இச்சோதனையில், 610 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே 2,578 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (05.03.2023) மட்டும் 3 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் (Bind over) பெற்றும், 09 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 426 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2க்கும் மேற்பட்ட அடிதடி, தகராறு வழக்கு குற்றவாளிகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்றவாளிகளுக்கு எதிரான சோதனை: இதே போல, நேற்றைய (05.03.2023) சிறப்பு சோதனையில், 2க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் தகராறு வழக்குகள் (Hurt Case) மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் (Extortion) சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 187 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்தும், விசாரணை செய்தும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் இவ்வழக்குகளில் தொடர்புடைய 114 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலும், 577 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நேற்று (05.03.2023) நடைபெற்ற சோதனையில், 4 குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெற்றும், 1குற்றவாளியிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2க்கும் மேற்பட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு எதரான சிறப்பு சோதனை
மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வழக்குகளில் (75 CP Act) குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், நேற்று (5.03.2023) 8 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்தும், விசாரணை செய்தும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே இவ்வழக்குகளில் தொடர்புடைய 17 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக நேற்று (05.03.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையில், மொத்தம் 805 குற்றவாளிகளை நேரில் கண்காணித்தும், 07 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 10 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகவே, சென்னை காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.