வேதாரண்யம்: கோடியக்கரையில் மீன்பிடி சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மீன்கள் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் மிக குறைந்த அளவே மீன் பிடித்துக் கொண்டு வந்தனர். இந்த ஆண்டு துவக்கத்தில் புயல் மழை மற்றும் பல்வேறு காரணங்களால் சீசன் மிக மந்தமான நிலையிலேயே காணப்பட்டது. தற்போது இயற்கை இடர்பாடுகளும் நீங்க சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. நேற்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் வலையில் அதிகளவு திருக்கைமீன் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் அதிகளவு கிடைத்திருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீசன் தொடங்கியது முதல் மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் 5 மாதத்திற்கு பிறகு தற்போது சீசன் முடியும் நேரத்தில் ஷீலா, காலா, வாவல், மூரல், திருக்கை, மத்தி, கலர் மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவு கிடைக்கிறது. மேலும், இங்கிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மீன் ஏற்றுமதியாவதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரே நாளில் கலர் மீன், கடல்கொய், பொக்கன் பொடி என மூன்று பெயர்களால் அழைக்கப்படும் சிறிய வகை கலர் மீன் சுமார் 20 டன் கிடைத்துள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த வகை மீன்கள் பத்து டன் முதல் இருபதுடன் வரை கிடைக்கிறது. இந்த மீன்கள் கோழி தீவனம் தயாரிக்கவும் மீன் எண்ணெய் தயாரிக்கவும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீசன் முடிவுக்கு வரும் நேரத்தில் சீசன் களை கட்டுவதால் மீன்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.