சென்னை: ஆபாச ஆடியோ விவகாரம், அதிமுகவுக்கு அண்ணாமலை செய்த துரோகம் குறித்து, பாஜக நிர்வாகி நிர்மல் குமார், எடப்பாடியிடம் புட்டு,புட்டு வைத்தார். இதை கேட்டு எடப்பாடி அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை திடீரென சந்திப்பதற்காக வந்தார். இந்த தகவல் எதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியாது.
அண்ணாமலையிடம் நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். எடப்பாடி வீட்டிற்கு போகும் போது நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிர்மல்குமாருக்கு போன் வந்தது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். போனை எடுத்த நிர்மல் குமார் அண்ணா... சின்ன மீட்டிங்கில் உள்ளேன். அண்ணனை திரும்ப கூப்பிடுகிறேன் என்று கூறி போனை கட் செய்து விட்டார். எடப்பாடி வீட்டில் இருந்தவரை அண்ணாமலையுடன் நிர்மல்குமார் தொடர்பில் தான் இருந்துள்ளார். அந்த அளவுக்கு நம்பிக்கையாகவும், நெருக்கமாகவும் இருந்தவர் தான் நிர்மல் குமார்.
இருந்த போதிலும் உள்ளுக்குள் பிரச்னை இருந்து கொண்டு தான் இருந்து இருக்கிறது. வெளியில் இரண்டு பேரும் தொடர்பில் இருந்து கொண்டு தான் இருந்துள்ளனர். தொடர்ந்து எடப்பாடியை சந்திக்க உள்ளே சென்ற அவர் எடப்பாடியிடம் சுமார் 45 நிமிடம் பேசியுள்ளார். அப்போது நிர்மல்குமார் அண்ணாமலை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எடப்பாடியிடம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, அதிமுக தலைவர்கள் எல்லோரும் அண்ணாமலையை பற்றி சொல்லும் போது, நமக்கு சொந்தக்கார பையன் அண்ணாமலை. அதனால், அவர் நமக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார். நமது வளர்ச்சியில் அண்ணாமலைக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்று எடப்பாடி நம்பி இருந்தார்.
அதிமுக தலைவர்கள் எல்லாரும் சொல்லும் போது அதை தட்டி கழித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.இந்த நிலையில் நிர்மல் குமார் எல்லாத்தையும் போட்டு உடைத்து விட்டார். அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு எதிராகவும் அண்ணாமலை என்ன பண்ணினார் என்பதை புட்டு... புட்டு நிர்மல் குமார் வைத்துள்ளார். ஐடி விங்கை வைத்து அண்ணாமலை என்ன செய்தார். என்னென்ன பிரசாரம் செய்தார். கடைசியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ஐடி விங், தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு எதிரி காங்கிரஸ் கிடையாது. அதனால காங்கிரசுக்கு கூட ஓட்டு போடுங்கள். அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள். அதிமுக பாஜகவை மதிக்காத கட்சி. தோற்றால் தான் அதிமுகவுக்கு புத்தி வரும்.
நாடாளுமன்ற தேர்தலில் நம்மிடம் வருவார்கள் என்று ஐடி விங் பிரசாரமே செய்தது. அந்த அளவுக்கு நடந்த துரோகம் எல்லாவற்றிற்கும் அண்ணாமலை தான் காரணம் என்றும் அப்போது நிர்மல் குமார் ஆதாரத்துடன் கூறியுள்ளார். அதிமுக உடைவதற்கும் அண்ணாமலை தான் காரணம். உடைவதற்கு என்னென்ன விஷயங்களை அண்ணாமலை செய்தார் என்ற விவரங்கள் அனைத்தையும் எடப்பாடியுடனான சந்திப்பின் போது நிர்மல் குமார் அதிரடியாக போட்டு கொடுத்துள்ளார். மேலும் பாஜக உள்கட்சிக்குள் நடைபெற்று வரும் ஆபாச ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் அப்போது எடப்பாடியிடம் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் புட்டு, புட்டு வைத்து நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதை கேட்டு எடப்பாடி கடுமையான அதிர்ச்சியடைந்தார். நம்பிய அண்ணாமலை இப்படி செய்தாரா? என்ற விரக்தியில் எடப்பாடி இருந்து வருகிறார். இதற்கு தக்க பதிலடி விரைவில் தெரிவிப்பேன் என்றும் எடப்பாடி அப்போது தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பற்றி அனைத்து விவரங்களையும் எடப்பாடியிடம், பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தெரிவித்துள்ள விவகாரம் தற்போது சூட்டை கிளப்பியுள்ளது.
