கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (53). இவர், கிழக்கு காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு காவல்நிலையத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். எட்டயபுரம் ரோடு தலைமை தபால் நிலையம் அருகே வரும் போது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி முத்துராஜ் உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் மாரிமுத்து (33) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், குருவிகுளத்தில் இருந்து விளாத்திகுளத்திற்கு லாரியில் மணல் ஏற்றச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவை கைது செய்தனர். விபத்தில் இறந்த எஸ்ஐ முத்துராஜூக்கு ராஜேஸ்வரி (50) என்ற மனைவியும், வெங்கடேஷ் (23) என்ற மகனும், சாருலதா (21) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் வெங்கடேஷ் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்