கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி மேட்டுத்தெருவை சேர்ந்த சுரேஷ், அம்மு ஆகிய இருவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் மூன்று ஆண்குழந்தைகள் உள்ளனர்.
சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தண்டவாளத்தில் மூன்று சடலங்கள் உள்ளதாக கல்லாவி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் சேலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.