மதுரை: மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன், 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்து மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவைகளை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ என்னும் திட்டத்தை கடந்த பிப்.1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்றைய தினமும் மறுநாளான பிப்.2ம் தேதியும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் ரூ.18.43 கோடியில் 2 ஏக்கரில் அமைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கிறார். இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.