
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த 86 வது இந்து சமய மாநாட்டை துவக்கி வைத்துதெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது: தமிழனை பொறுத்தமட்டில் சுயநலவாதி கிடையாது. அதனால் தான் மற்ற மாநிலத்தில் இருந்து நமக்காக வேலை செய்ய வந்திருப்பவர்களை தாயுள்ளத்தோடு நாம் அரவணைக்கிறோம். பிறரை மதிப்பதை தவம் என்று நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்தார்கள்.
ஆனால் சிலர் மொழி தொடர்பான கருத்துக்களை மாறுபட்டு கூறி ஒரு பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் மொழி மீது பற்று இருக்கிறது என நினைத்துக் கொண்டு இணைய தளங்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம் கலாசாரம் எதை நமக்கு சொல்லிக் கொடுத்ததோ அதை நாம் மறந்து கொண்டிருக்கிறோமோ என்ற ஒரு சந்தேகம், வேதனை வருகிறது. வேறு மாநில சகோதர, சகோதரிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டுமே தவிர அச்சத்தோடு மாநிலத்தை விட்டு செல்லும் நிலையில் யாருமே இருக்கக்கூடாது என்றார்.