×

சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் சென்னையில் தனியார் பஸ்கள் இயக்க அனுமதி: மாநகர் போக்குவரத்து கழகம் திட்டம்

சென்னை: சென்னையில் தனியார் பஸ்களை இயக்க, மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் 500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3,400க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் 31 பணிமனைகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தினமும் 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.  இதில் பெண்களுக்கு இலவச சேவை, முதியவர்களுக்கு இலவச சேவை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், மாதாந்திர கட்டண பாஸ் என பயணிகள் வசதிக்காக பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில், சென்னையை தவிர மற்ற நகரங்களில் தனியார் நிறுவனங்களின் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் இப்போது அரசின் மாநகர் போக்குவரத்து கழகம்(எம்டிசி) சார்பில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி உட்பட 4 வகை பேருந்துகளை மாநகர் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இதனிடையே பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக பேருந்து சேவை வழங்குவதற்கான தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் தனியார் பேருந்து நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் கடந்த 1ம் தேதி முதல் மாநகர போக்குவரத்து கழகத்திடம் விண்ணப்பித்து வருகின்றன.  தரம் மற்றும் செலவு அடிப்படையில் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்படும். நடப்பாண்டில் முதலில் 500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னையில் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கப்படும். இதனால் மக்கள் பெரியளவில் பயன் பெறுவார்கள்.  

இப்போது மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும். இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டம் தற்போது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. கிராஸ் காஸ்ட் கான்டிராக்ட் என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி மாநகர் போக்குவரத்து கழக கட்டுப்பட்டிலேயே தனியார் பேருந்துகள் இயங்கும். தனியார் நிறுவனங்களே பேருந்துகளை வாங்கி, பராமரித்து, இயக்கும். மேலும் மாநகர் போகுவரத்துக்கழகம் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்யும்.

அதன்படி ஒவ்வொரு நாளும் வசூலிக்கப்படும் தொகையைத் தனியார் பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்திடம் கொடுக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு  செல்லும். அதேநேரம் குறைவாக இருந்தால் இழப்பு தொகையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தனியார் நிறுவனங்களுக்கு தரும். சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chennai , Permission to operate private buses in Chennai under City Partnership Scheme: Municipal Transport Corporation scheme
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...