சென்னை: ஆன்லைன் ரம்மியில் ரூ.17 லட்சம் பணம் இழந்ததால், நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன நபர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சுரேஷின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. உடலை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை கே.கே.நகர் 14வது ஷெக்டர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(42). தொழிலதிபர். ஜெராக்ஸ் இயந்திரத்திற்கான டோனர் மை மொத்தமாக சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தொழிலதிபர் சுரேஷ் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் முதலில் அவருக்கு அதிக வருமானம் வந்ததாக கூறப்படுகிறது. அதை நம்பிய சுரேஷ், ரூ.16 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியில் வைத்து விளையாடியுள்ளார். அதில் அவரது முழு பணத்தையும் இழந்துள்ளார். இதனால் அவர், தொழில் நடத்த முடியாமல் கடந்த ஒரு வாரமாக வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சுரேஷ் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். தனது கணவர் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. பிறகு வீட்டில் ஆய்வு செய்த போது, சுரேஷ், தனது மனைவி ராதா மற்றும் 2 குழந்தைகளுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தது தெரியந்தது. அந்த கடிதத்தில், ‘ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்ததால் என்னால் கடனில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து தொழிலதிபர் சுரேஷ் மனைவி ராதா கே.ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் புகைப்படத்தை வைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், மெரினா கடற்கரையில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.