சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் திரை பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது செய்யப்பட்டார். தனியார் அமைப்பு இயக்குனர் ராஜூ ஹரீஷ் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஆம்பூரில் பதுங்கி இருந்த ஹரீஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26ம் தேதி விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில், இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், உள்பட பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. இவற்றை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார்.
இந்த மோசடி குறித்து அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், தரப்பில் தனித்தனியாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார்கள்அளிக்கப்பட்டன. அதன்படி, நிகழ்ச்சி இயக்குனர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் தலைமறைவானார். இந்நிலையில், கோட்டூர்புரத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி, ராஜு ஹரிஷ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணை வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக் கழகம் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் கோரிய, ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூரில் பதுங்கி இருந்த ஹரீஷை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆம்பூரில் கைது செய்யப்பட்ட ஹரீஷை சென்னை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதுவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.