புதுடெல்லி: மழை, வெப்ப பருவகால மாற்றங்களால் சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறித்து ஒன்றிய, மாநில சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஹெச்என்2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் வரை இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம். பொதுவாக இந்த பருவ கால காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானவர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படும்.
எனவே, பருவ கால சளி காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் (நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்கும் மருந்து) மருந்து மாத்திரைகளை தர கூடாது. குறிப்பாக நோயாளிகள் அசித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிக்லாவ் போன்ற மருந்துகளை வைரஸ் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை. பல ஆன்டிபயாட்டிக்குகள் நோயாளிகளிடம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, 70 சதவீத டயரியா பாதிப்புகள் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு அமோக்ஸிசிலின், நார்ஃப்ளோக்சசின், ஓப்ரோஃப்ளோக்சசின், ஆஃப்லோக்சசின், லெவோஃப்ளோக்சசின் போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறாக கொடுக்கின்றனர். எனவே, மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.