சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், பீகார் மாநிலத்தில் வதந்திகள் பரவியது. தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களிடமும் இந்த வதந்தி பரவியதை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு தொழில்கள் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதனை அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.