பெரம்பலூர் : சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 77வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வயலப்பாடியை சேர்ந்தவர் மணி (77). இவர், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல், குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹20ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆஜரானார்.
