தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் ஆய்வு நடத்தி வருகிறார். 1992ல் சந்தன கட்டைகளை பதுக்கியதாக பழங்குடியினர் மீது போலீஸ் வருவாய்த்துறை, வனத்துறையினர் தாக்குதல் நடத்தினர். பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பல பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 1996ல் சிபிஐ விசாரித்தது. 2011ல் உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 பேரில் வனத்துறையினர் 12 பேருக்கு 10ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி பி.வேல்முருகன் ஒத்திவைத்தார். வழக்கை ஒத்திவைத்த நீதிபதி பி. வேல்முருகன் இன்று வாச்சாத்தி மலை கிராமத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.