சென்னை: பக்கிங்காம் கால்வாய் மத்திய பகுதி புனரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சரபங்கா திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், மற்றும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அப்பணிகளை விரைவில் முடிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், முதற்கட்டமாக பக்கிங்காம் கால்வாயின் மத்திய பகுதி புனரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கவும், நடந்து வரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டுமென்று அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் உடனடியாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக திட்ட மதிப்பீடுகளை தயார் செய்யுமாறு அமைச்சர், அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, ரா.கண்ணன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், கோயம்புதூர் மண்டல தலைமை பொறியாளர் முத்துசாமி, மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஞானசேகரன், திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
