நாகர்கோவில்: பசுமை சங்கமம் என்ற பெயரில் 2 நாள் கண்காட்சி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் எழுமின் இயக்க நிறுவனர் ஜெகத்கஸ்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் உணவு திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் பாரம்பரிய உணவு வகைகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
சிறுதானிய உணவு கண்காட்சி என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த உளுந்தம் பால் கருப்புக் கவனி, பால் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை உளுந்துங்களி, வரகு பாயாசம், சிறு தானிய காரா பாயாசம், வரகு லட்டு, கம்பு நெய் லட்டு, சாமை லட்டு, திணை லட்டு, ராகி அடை, திணை புட்டு, கிழங்கு வகைகள், உள்ளிட்ட 95 வகையான பாரம்பரிய உணவு வகைகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
இவை தவிர கேழ்வரகு கூழ், கம்பு கூழ் போன்றவைகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. இது மட்டுமல்லாமல் செவ்வாழை, ஏத்தன், ரசகதலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை தவிர தோவாளை பூக்களின் காட்சி, நெல்ரகங்களின் கண் காட்சி, மீன் சார்ந்த கடல் உணவுகள் போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன. நாளையும் கண்காட்சி நடக்கிறது.