×

ட்ரோன் மூலம் தகர்க்கப் போவதாக வாரணாசி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாரணாசி: ட்ரோன் மூலம் வாரணாசி விமான நிலையத்தை தகர்க்கப் போவதாக வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அடுத்த பாபத்பூரில் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி சக்தி திரிபாதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், ‘வாரணாசி விமான நிலையத்தை ட்ரோன் மூலம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மேற்கண்ட மிரட்டல் கடிதம் தொடர்பாக புல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் வழக்குப் பதிவு  செய்து விமான நிலையத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர். மேலும் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக வந்த மிரட்டல் கடிதம் குறித்து தீவிர விசாரணை நடித்த வருவதாக பிந்த்ரா போலீஸ் ஏசிபி அமித் பாண்டே தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தற்போது வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பதால் உத்தரபிரதேச போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Varanasi airport , Bomb threat to Varanasi airport by drone
× RELATED வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கொரோனா அறிவிப்பு