சென்னை: தேசிய அளவில் கலை மற்றும் விளையாட்டு திருவிழாவான வைப்ரன்ஸ் ஆண்டுதோறும் சென்னைவிஐடியில் நடந்து வருகிறது. இந்தாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே, விழாவை தொடங்கி வைத்தார். இதில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஷிவம் துபே பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர்கள் பென்னி டயால், ஷெர்லி செட்டியா பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கண்டுகளித்தனர். முன்னதாக, நேற்று போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தொடங்கி மாம்பாக்கம் சென்று மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாரத்தான் முடிவடைந்தது.
இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதுமட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.