மணப்பாறை: வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக பெரம்பலூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பூவை செழியன் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செட்டியப்பட்டி ஊராட்சி பாம்பாட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி(40). அதிமுக கிளை செயலாளர். இவரது மனைவி மின்னல்கொடி. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இந்தநிலையில் மின்னல்கொடிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதற்காக சின்னசாமி, பெரம்பலூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏவான பூவை செழியனிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வேலைவாங்கித்தரவில்லை. இதையடுத்து சின்னசாமி கடந்த ஆண்டு அக்டோபர் 30ல் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் சரிவர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சென்னைக்கு சென்ற சின்னசாமி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சின்னசாமியை தடுத்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் அதிமுக எம்எல்ஏவிடம் ரூ.8 லட்சம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை டிஎஸ்பி பிருந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் டிஎஸ்பி பிருந்தா பூவை செழியனை விசாரணைக்கு அழைத்தார். பின்னர் அடுத்தடுத்த விசாரணைக்கு அழைத்தபோது பூவை செழியன் வராதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து விசாரணைக்கு வரவில்லை. இந்தநிலையில் இன்று வையம்பட்டி போலீசார் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பூவை செழியன் மீது மோசடி வழக்கு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்….
The post வேலை வாங்கி தருவதாக மோசடி அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு வலை: 3 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.