சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை அடுத்து திமுக, காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த 27ம் தேதி நடந்தது. இதில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுகவில், எடப்பாடி அணி சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர் பின்னடைவை சந்தித்து வந்தார். நேரம் ஆக, ஆக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வாக்குகள் வித்தியாசம் அதிகரிக்க தொடங்கியது.
இதையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதியானது. இதைத் தொடர்ந்து வெற்றி கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் பட்டாசு, வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடினர். அதே போல தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர். ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியை கொண்டாடினர். இதனால், சென்னை அண்ணா அறிவாலயம், சத்திய மூர்த்தி பவன் தொண்டர்களால் களைக்கட்டி காணப்பட்டது.
