திருப்போரூர்: முட்டுக்காட்டில் மாற்றுத்திறனாளி கண்காட்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சென்னை அருகே முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி மற்றும் மாற்றத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், இந்தியா முழுவதும் இருந்து 23 மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கலைப் பொருட்களை 60 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இந்த கண்காட்சிக்கு நிறுவனத்தின் இயக்குனர் நச்சிகேதா ரௌட் தலைமை தாங்கினார். கண்காட்சியை இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் நிறுவன மேம்பாட்டு சேவை இணை இயக்குனர் கட்டே ரவி திறந்து வைத்தார். பதிவாளர் அமர்நாத் நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.