சென்னை: எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் எட்டு வயது சிறுமி தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2019 ஜூன் 8ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை, தாத்தா உறவு முறை கொண்ட இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மிரட்டி, அவ்வப்போது இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை அறிந்த சிறுமியின் தாய், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு பேரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த உறவினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஏழு லட்சம் ரூபாயை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.