குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ரஞ்சி சாம்பியன் மத்திய பிரதேசம்(மபி), மற்ற மாநிலங்களை உள்ளடக்கிய இதர இந்திய அணி இடையில இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. டாஸ் வென்று களம் இறங்கிய இதர இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 87ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்சில் 381ரன் விளாசியது. இதில் 374ரன்னை ஜெய்ஸ்வால்(213), அபிமன்யூ(154) இணைதான் எடுத்தது. தொடர்ந்து 2வது நாளான நேற்று சிறப்பாக விளையாடிய யாஷ் துல் 55ரன் எடுத்தாார். மற்றவர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அதனால் இதர இந்தியா முதல் இன்னிங்சில் 121.3ஓவரில் 484ரன் குவித்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மபி 8ஓவருக்கு 3 விக்கெட்களை இழந்து 15ரன் எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. அதன் பிறகு இணை சேர்ந்த ஹர்ஷ் காவ்லி யாஷ் துபே நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாட மபி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 43ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 112ரன் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள ஹர்ஷ் 47, துபே 53ரன்னுடன் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்கின்றனர்.