சேத்தியாத்தோப்பு: சி. சாத்தமங்கலம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலக கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.சாத்தமங்கலம் ஊராட்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். சாத்தமங்கலம், சக்திவிளாகம், கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, மாணவர்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டு நூலக கட்டிடம் திறக்கப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் 10 ஆண்டுகளாக நூலக கட்டிடத்தை பராமரிக்காத காரணத்தால் கட்டிடம் சேதமடைந்து வருகிறது. மேலும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி உள்ள படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வு பெறமுடியாமலும், அறிவு திறனை வளர்த்து கொள்ள நூல்கள், தினசரி நாளிதகள், வாசிக்க முடியாமலும் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட நூலக அதிகாரிகள் ஆய்வு செய்து, பூட்டி கிடக்கும் நூலக கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.