மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலரங்காபுரம் பகுதியில் செயல்படும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாய்ப்புண் ஏற்பட்டது.
இதனால் ரவி பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றார். ஆனால் வாய்ப்புண் குணமாகவில்லை. இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி கவலையுடன் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரவியை மேல் சிகிச்சைக்காக அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடுமையான வலி காரணமாக அவதிபட்டு வந்த அவர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரத்திற்கு பின்னரும் ரவி வார்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது ரவி கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.