×

காஞ்சிபுரம் அருகே மீண்டும் சேதமடைந்த பாலாற்று மேம்பாலம்: வாகன ஓட்டிகள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் மையப்பகுதியில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மீண்டும் பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேம்பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு ஓரிக்கை கீழ் சாலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செவிலிமேடு மேல் சாலை என இரண்டு பகுதிகளில் தலா 1 கிமீ நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல்சாலை வழியாக அதாவது செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலை வழியாக செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செய்யாறு சிப்காட்  தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்கின்றன. மேலும், புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம், கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் நெசவாளர்கள் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு காஞ்சிபுரத்தை நம்பி இருப்பதால் அதிகளவில் பைக்கில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பாலத்தின் இணைப்பு பகுதிகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அச்சுறுத்தும் வகையில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் டூவீலரில் செல்வோர் அச்சத்துடன் மேம்பாலத்தை கடந்து செல்கின்றனர். இரவில் நைட் ஷிப்ட்  வேலைக்கு செல்லும் தனியார் கம்பெனி இளைஞர்கள் பாலத்தை கடக்கும்போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதையடுத்து, கலெக்டர் ஆர்த்தி, எஸ்பி சுதாகர் ஆகியோர் பாலத்தை பார்வையிட்டு சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதனால் அந்த இடத்தில் தற்காலிகமாக தார் கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. சரிசெய்யப்பட்ட 1 மாதத்திற்குள் மீண்டும் மேம்பாலத்தின் கான்கிரீட் கலவை, தார் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. எனவே, சேதமடைந்துள்ள பாலாற்று பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர், மேம்பாலத்தில் பழுதான பகுதியை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதால் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Palatu ,Kanchipuram , Palatu flyover damaged again near Kanchipuram: motorists fear
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...