குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில உள்ள மகா காளியம்மன் கோயில் மாசி திருவிழாவில், பக்தர் ஒருவர் 20 அடி நீள அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமகா காளியம்மன் மற்றும் ஸ்ரீபகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை பெரிய பூங்கரகம் வீதி உலா வந்தது.
இதனையொட்டி குஜிலியம்பாறையை சேர்ந்த பக்தர் ஒருவர், 20 அடி நீளமுள்ள அலகு குத்தி கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். தொடர்ந்து பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு, கரும்பு தொட்டில், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை ஏராளமான பக்தர்கள் செலுத்தினர். இன்று மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதையடுத்து நாளை அதிகாலை காளியம்மன், பகவதியம்மன் கோயில் கரகம் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. ஊர் முக்கியஸ்தர்கள் கோவிந்தராஜ், ராஜேந்திரன், வடிவேல், நாகமையன் மற்றும் பொதுமக்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.