கச்சத்தீவு: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் வருடாந்தர திருவிழாவிற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது. ராமேஸ்வரம் அருகே வங்கக்கடல் பரப்பில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் நடைபெறும் திருவிழா புகழ்பெற்றது. இந்த ஆண்டு திருவிழாவில் தமிழகத்திலிருந்து 2408 பேரும் இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பேரும் பங்கேற்கவுள்ளனர்.
நெடுந்தீவு பிரவேச அலுவலர்கள் கச்சத்தீவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன் தலைமையிலான பங்குத்தந்தைகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரகம் தெரிவித்தது.