சென்னை: சென்னையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
சமூக நீதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்களை அணுகும் தமிழ்நாட்டின் போக்கை ஒட்டுமொத்த இந்தியாவும் கற்று கொள்ள வேண்டும். பாஜ அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது போல், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சித்தது. ஆனால், பீகாரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்காட்சிகளும் ஒரே கொள்கையில் ஒன்றிணைந்து அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என்பது அவ்வளவு பெரிய சவால் இல்லை.
புத்தக வெளியீட்டு விழாவிற்கு கடைசியாக நான் வந்தபோது ராகுல் காந்தி கேட்டார். எப்படி அவர் இவ்வளவு இளமையாக உள்ளார். 70 வயதானாலும் இளைஞர் போலவே காட்சியளிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட சவால்களே இளமையாக இருக்க காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.