நெல்லை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் தென்கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை, தூத்துக்குடியில் நேற்று காலை கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை டவுன், தச்சநல்லூர், பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பத்தமடை, வள்ளியூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி பகுதிகளில் கனமழை பொழிந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைகரைப்பட்டியில் 20மி.மீட்டரும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் 19 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பருவம் தவறி பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.