சென்னை: தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னை புதுக்கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிறகு மாணவர்களிடம் அவர் பேசுகையில், ‘‘முதல்வர் பிறந்தநாளன்று இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி. கடந்த முறை 20,000 மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்றுள்ளனர். திமுக பேசியே வளர்ந்த இயக்கம், பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துகள், நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதே மிகப்பெரிய வெற்றி தான்.
மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்குபெறும்போது, தமிழ் இனத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி கே.எஸ். மஸ்தான், தயாநிதி மாறன் எம்.பி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.