×

பங்குனி பிரமோற்சவ விழா; திருவானைக்காவல் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்: 23ம் தேதி தேரோட்டம்

திருச்சி: பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரமோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 7 மணி அளவில் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வரும் 18ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19ம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20ம் தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21ம்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22ம்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24ம் தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25ம் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26ம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

27ம் தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.  ஏப்ரல் 6ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7ம் தேதி சாயாஅபிஷேகம், 8ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Tags : Bankuni Promotava Ceremony ,Tiruvanaikaval Temple ,Thiruvanaikaval Temple , Panguni Graduation Ceremony; Flag hoisting procession at Thiruvanaikaval Temple: Chariot procession on 23rd
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!