×

பல் துலக்குவதே மகிழ்ச்சியாக இருக்கு: விபத்திற்கு பின் மவுனம் கலைத்த ரிஷப் பன்ட்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வரும் ரிஷப் பன்ட், கிரிக்கெட் களத்திற்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்துக்கு பின் முதன்முறையாக அவர் மவுனம் கலைத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன். என் உடல் நலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்படுகிறது.

கடவுளின் அருளாலும் என்னுடைய மருத்துவ நிபுணர்களின் உதவியாலும் நான் விரைவில் முழு உடல் தகுதியை எட்டுவேன். என்னை சுற்றி நடக்கும் விஷயம் நல்லதா, கெட்டதா என்று எனக்கு சொல்வதில் கடினமாக இருக்கிறது. ஆனால் விபத்துக்கு பிறகு வாழ்க்கை மீதான கண்ணோட்டமே எனக்கு மாறிவிட்டது. வாழ்க்கையில் தற்போது ஒவ்வொரு நாளையும் நான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். உயிரோடு இருப்பதே பெரியது என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி இருக்கிறது. இதனால் என் வாழ்க்கையில் நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது.

விபத்திற்குப் பிறகு தற்போது என்னால் பல் துலக்க முடிவதையே நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதைப் போன்று வெயிலில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து என் மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய விபத்துக்கு பிறகு நான் அறிந்து கொண்டதும் மக்களுக்கு நான் சொல்ல நினைப்பதும் ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதம். அதனை மனதில் ஏற்றுக் கொண்டு நான் வாழ்கிறேன். தற்போது மருத்துவ நிபுணர்கள் கொடுத்துள்ள அட்டவணைப்படி தான் என் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன்.

காலையில் எழுந்து முதலில் பிசியோதெரபி பயிற்சியை செய்கிறேன்.அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்ய தொடங்குகிறேன். என்னால் எவ்வளவு வலியை பொறுத்துக் கொள்ள முடியும் என்பதை பொறுத்து இந்த பயிற்சி அமையும். எனக்காக இவ்வளவு பேர் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ஆதரவளியுங்கள். உங்களை மீண்டும் நான் வந்து சந்திக்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Tags : Rishabh Pant , Brushing teeth is happiness: Rishabh Pant breaks silence after accident
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...