திருமலை : சித்தூர் அடுத்த பலமனேரில் வாழை, தென்னந்தோப்பில் புகுந்த 20 யானைகள் கூட்டம் அட்டகாசம் செய்ததால் 10 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரில் உள்ள கொளமசானப்பள்ளி ஊராட்சி, கீழ மருமூர், கல்லாடு கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களில் நேற்று அதிகாலை 20 யானைகள் கொண்ட கூட்டம் திடீரென புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
இதில், வேணுகோபால் ரெட்டி என்பவரின் வாழை, தென்னந்தோப்புகள் யானைகள் மிதித்து துவம்சம் செய்ததால் முற்றிலுமாக சேதமடைந்தது. இதேபோன்று பல விவசாயிகளின் பயிர்கள் யானைகள் கூட்டத்தால் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை போன் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
யானைகளால் சேதமடைந்த 10 ஏக்கர் விவசாய பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.