திருப்பூர் : முதலிபாளையத்தில் செயல்படும் குப்பை கிடங்கில் வாகனங்களின் பதிவேட்டை மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 60 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்ற, மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குப்பை இல்லாத மாநகரமாக திருப்பூரை மாற்ற வேண்டும் என்னும் இலக்குடன் குப்பைகள் வார்டுகள் தோறும் சேரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு, பிரித்து அகற்றப்படுகிறது.இந்நிலையில் முதலிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது குப்பை கிடங்கிற்கு வரும் குப்பை வாகனங்கள் குறித்தும், வாகன பதிவேட்டையும் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.