சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் செயலாற்றும் கொள்கை வீரராக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னேறி வருகிறார்’ என முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக தலைவரும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69 வயதை கடந்து, 70வது பிறந்த நாள் காணும் இனிய நாளில், அவர் மேலும் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன், வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட கட்சி வாழ்த்துகிறது.
பதினான்காவது வயதில் “இளைஞர் அணி” அமைத்து, கோபாலபுரத்தில் தொடங்கிய அரசியல் பணி 56 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. கலைஞர்-தயாளு அம்மையார் தம்பதியருக்கு மூன்றாவது மகவாக பிறந்த மு.க.ஸ்டாலின், தந்தையின் சிந்தனை தாக்கத்தில் அவர் நடந்த அரசியல் பாதையை தேர்வு செய்து பயணம் தொடர்ந்தவர். போராட்டப் பாரம்பரியம் கொண்ட திமுகழகத்தின் தலைவர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், சமூகநீதி ஜனநாயகத்தை பாதுகாக்கவும், தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் உறுதியுடன் செயலாற்றும் கொள்கை வீரராக முன்னேறி வருகிறார்.
மதவெறி, சாதிய சக்திகளை தனிமைப்படுத்தி, சுயநல கும்பலை முறியடிக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைத்து, அதனை வழி நடத்தும் தலைமை ஏற்றதும், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும் பெருமை அளிப்பதாகும். கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வரும், வகுப்புவாத, ஜனநாயக விரோத சக்திகளை ஒன்றிய அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு வழங்கும் கடமையாகும். இந்த வரலாற்று கடமையில் நூறு சதவீதம் வெற்றி பெற்று, பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.