×

திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் இன்றி வயல் முழுவதும் வெடிப்பு-தண்ணீர் திறந்து விடவிவசாயிகள் கோரிக்கை

திருவையாறு : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திங்களூர், பெரும்புலியூர், தில்லைஸ்தானம், ராயப்பேட்டை, காருக்குடி, ஈச்சங்குடி போன்ற கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளனர். இவைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வயல்கள் வெடித்து காணப்படுவதால் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தாண்டு டெல்டா பாசன விவசாயத்திற்காக தமிழக அரசு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்ததால் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் கோடைபயிர் செய்யப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பே விதை இடப்பட்டு நாற்று பறித்து நடவு பணி மேற்கொள்வதற்கு காலதாமதம் ஆனதால் குறுவை சாகுபடி அறுவடை வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து காலதாமதம் சம்பா தாளடியிலும் ஏற்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு எந்த விதமான முன்னறிவிப்பு இல்லாமல் மேட்டூர் அணையை முன்னதாகவே நிறுத்தி விட்டனர். இதனால் அதிர்ந்து போன விவசாயிகள் எங்கள் பகுதிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என தெரிவித்து மனு மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொடுத்து 25 நாட்கள் ஆகியும் இன்னும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளதால் நெற்பயிர்கள் கதிர் வந்தது பாதி, வராதது பாதியுமாக உள்ளது. வயல் வெடிப்புடன் காணப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நாங்கள் ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளோம். ஆகையால் தமிழக அரசு அதிகாரிகளைக்கொண்டு நேரடியாக ஆய்வு செய்து ஒரு முறை தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே இருக்கின்ற நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் வயலிலே பயிர் காய்ந்து சருகாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு இதுவரையில் 35 ஆயிரம் வரையிலும் செலவு செய்து பயிரைக் காப்பாற்றி உள்ளோம். மேலும் காப்பாற்ற தண்ணீர் இருந்தால் மட்டுமே முடியும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvaiyar , Tiruvaiyar : Thanjavur District, Thingalur, Perumbauliyur, Thillaistan, Rayapetta, Kharukudi, Echangudi near Thiruvaiyaru etc.
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...