திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வளையாம்பட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சாலையை கடக்க முயன்றபோது 2 சைக்கிள்களில் வந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. விபத்தில் மாணவர்கள் உயிரிழந்ததை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து அதிகவேகமாக பெங்களூரு சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை கடந்து சர்விஸ் சாலையில் சென்றது. அப்போது வளையாம்பட்டியில் இருந்து அரசு மேல்நிலை பள்ளிக்கு சர்விஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது அந்த கார் அதிவேகமாக மோதியது. அந்த கார் மோதிய விபத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேரை பொதுமக்கள் பிடித்து தாக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்தவர்களை பொதுமக்களிடம் இருந்து காப்பாத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு விபத்துகள் தொடர்ந்து வருவதாலும் விபத்தை தடுக்க பாதுகாப்பு தடுப்புகள் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.