அங்கரா: துருக்கியில் நேற்று மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானார். 69 பேர் படுகாயமடைந்தனர். துருக்கி, சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்தது. நிலநடுக்கத்தால் துருக்கியின் 11 மாகாணங்கள் உருக்குலைந்தன.
துருக்கி,சிரியாவில் கட்டிடங்கள் இடிந்ததில் 48,000 பேர் மரணமடைந்தனர். தற்போது மீட்பு பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகிய நிலநடுக்கம் குறித்து அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் கூறும்போது,‘‘ மட்டையா மாகாணத்தின் யெசிலியூர்ட் நகரில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 69 பேர் படுகாயமடைந்தனர்’’ என்றார்.