ரோம்: இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் இருந்து ஐரோப்பாவை நோக்கி 170 அகதிகளுடன் சென்று கொண்டிருந்த கப்பல், இத்தாலி தீபகற்பத்தின் கேலாப்ரியா பிராந்தியத்தில் உள்ள ஸ்டெக்காடோ டி கட்ரோ பகுதியை கடந்த போது, கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், 27 சடலங்களை மீட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று மீண்டும் படகுகள் மற்றும் விமானங்கள் மூலம் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், பல குழந்தைகள், இளைஞர் உள்பட மேலும் 30 பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அயோனியன் கடலில் உள்ள ஸ்டெக்காடோ டி கட்ரோ கடற்கரைப் பகுதி முழுவதும் உடைந்த படகின் மரத்துண்டுகள், அதில் பயணித்த குழந்தைகளின் பென்சில் பாக்ஸ், வாட்டர் பாட்டில், சில லைப் ஜாக்கெட்டுகள் இறைந்து கிடந்தது, காண்போரின் நெஞ்சை உலுக்கியது. இதுவரை 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு இத்தாலி வந்த 1.05 லட்ம் அகதிகளில் 15 சதவீதத்தினர் துருக்கி வழியாக வந்ததாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.