சென்னை: சாகர்மாலா திட்டத்தின் கீழ், சென்னை - புதுச்சேரி இடையேயான சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிறிய துறைமுகங்களை பெரிய துறைமுகங்களுடன் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-புதுச்சேரி இடையேயான சரக்கு போக்குவரத்து சேவையை, சென்னை துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதன்பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: சென்னை-புதுச்சேரி இடையேயான, சரக்கு கப்பல் சேவை மூலம் தரைவழி போக்குவரத்து செலவில் 25 சதவீதம் மிச்சமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மேலும், சாகர்மாலா திட்டத்தின் மூலம் புதுச்சேரி துறைமுகத்துக்கு சரக்கு சேவை துவங்குவதால் கடலூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு சேவையளிப்பதாக இருக்கும். இந்த சேவை வாரம் இருமுறை நடைபெறும். மேலும், மதுரவாயில் துறைமுகம் பறக்கும் சாலை திட்டப்பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 5,500 கோடி ஒப்பந்த புள்ளி மார்ச் 7ம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.