உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவிழா நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்ோது, பக்தர்கள் தேங்காய் உடைத்தும், தீபாராதனை காண்பித்தும் அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில், அனுமந்தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.