மதுராந்தகம்: கரிக்கிலி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் நேற்று திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கரிக்கிலி ஊராட்சியில் சித்தாமூர் கிராமம் உள்ளது. இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு துணை தலைவர் விஜயலட்சுமி கருணாகரன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர், மகளிர் சுய உதவி குழுவினர், பணிதள பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.