சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் யார், யாரை எங்கே உட்கார வைப்பது என்பது என்னுடைய முடிவு என்று கூறிய அவர், அதிமுக எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று தெரிவித்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும், ஆளுநர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் வாயிலாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக் குழு முடிவெடுக்கும் என்றும் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ம் தேதி கூட உள்ளதும், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.