குன்னூர்: கோடைகாலம் தொடங்கும் முன்பு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் 101 டிகிரி பரான்ஹீட் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர், ஊட்டி, கூடலூர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வனப்பகுதிகளில் சில நேரங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூரில் ஆங்காங்கே, கடந்த ஒரு வாரமாக, இரவிலும், பகலிலும் காட்டுத்தீ பரவுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று குன்னூர் அருகே பேரட்டி சாலையோர வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியதாலும், புகையிலும் சிரமப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதில், 10 ஏக்கர் பரப்பளவில் மரங்கள், செடிகள், புல் வகைகள் எரிந்து நாசமாகின.