×

கீழ்கட்டளை, நங்கநல்லூரை சேர்ந்த 2 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி பலி

சென்னை: திருவண்ணாமலை அடுத்த படவேடு கமண்டல நதியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன்(35), நங்கநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன்(38). இவர்களுடன் 8 பேர் கொண்ட குழுவினர் யூடியூப் சேனல் படப்பிடிப்பிற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு ராமர் கோயிலில் தங்கினர். தொடர்ந்து, நேற்று மதியம் 2 மணியளவில் உணவு சாப்பிட்டு முடித்ததும் பிரகலாதன் கை மற்றும் பாத்திரங்களை கழுவ கோயில் அருகே உள்ள கமண்டல நதிக்கு சென்றுள்ளார். அவருடன் ஸ்ரீவர்சனும் சென்றுள்ளார். பின்னர், பிரகலாதன் பாறையில் நின்று கொண்டு கை கழுவும்போது திடீரென கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவர்சன், கை கொடுத்து தூக்க முயற்சிக்கும்போது, அவரும் நிலைதடுமாறி ஆற்றுநீரில் விழுந்துள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போளூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய  அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரகலாதன், ஸ்ரீவர்ஷன் ஆகியோரது சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kilikatalla, Nanganallur, 2 youths killed
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...