பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் அன்னை சத்யா நகர் மெயின் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஜய்சிங் (40). வட மாநிலத்தை சேர்ந்த இவர், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் மாலை 4 மணிக்கு பானிபூரிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்துவிட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் தனது அறைக்கு சென்றுவிடுவார்.
நேற்று வியாபாரம் செய்துவிட்டு இரவு 11 மணி அளவில், கொடுங்கையூர்-தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை குப்பைமேடு பகுதியில் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேர் விஜய்சிங்கை மறித்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே அவரை சரமாரியாக அடித்து அவரிடம் இருந்த 2000 ரூபாயை பறித்து தப்பினர். இதுசம்பந்தமாக விஜய் சிங் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.